சேலம் ஜான்சன்பேட்டையில் 10 பேரை கடித்து குதறிய வெறி நாய்

சேலம், டிச. 5: சேலம் மாநகர பகுதிகளில் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் தெருவில் நடப்பதற்கு கூட அச்சத்துடன் செல்லும் சூழல் உருவாகி உள்ளது. இந்நிலையில்,சேலம் அஸ்தம்பட்டி மண்டலம் 13வது வார்டு ஜான்சன்பேட்டை பகுதியில் வெறி நாய் ஒன்று சுற்றி வருகிறது. நேற்று முன்தினம் அந்த பகுதி வழியாக சென்ற 6 பேரை ஓட, ஓட விரட்டி அந்த நாய் கடித்துக் குதறியது. நேற்று காலையிலும் அந்த நாய் 4 பேரை விரட்டிக் கடித்தது. காயம் அடைந்த 10 பேரும் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இதனால் அந்த பகுதியினர், அந்த நாயை துரத்தி விட்டனர். ஆனாலும் அந்த பகுதியிலேயே தொடர்ந்து சுற்றி வருகிறது.

இதனால், அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் ஒருவித அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். எனவே, அந்த வெறி நாயை மாநகராட்சி சுகாதார பணியாளர்கள் உடனே பிடித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், தெருநாய்களை பிடித்து கருத்தடை செய்து வருகிறோம். எந்த பகுதியில் நாய்கள் தொல்லை அதிகமாக இருக்கிறதோ அந்த பகுதிகளில் நாய்களை பிடித்து வருகிறோம். தற்போது இந்த பகுதியிலும் நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

அம்மன் கோயிலில் உண்டியல் திருட்டு

வாழப்பாடி, டிச.5: பெத்தநாயக்கன்பாளையம் அடுத்த வீரகவுண்டனூர் வன்னியர் தெருவில் மகாசக்தி மாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் உள்ள உண்டியல், கடந்த 3 ஆண்டுகளாக திறக்கப்படாமல் இருந்தது. நேற்று முன்தினம் இரவு, மர்மநபர்கள் கோயில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து, உண்டியலை பெயர்த்து எடுத்துச்சென்றுள்ளனர். நேற்று கோயில் உண்டியல் அருகில் உள்ள புதருக்குள் வீசப்பட்டு கிடந்தது. அதில் இருந்த பணத்தை திருடிக் கொண்டு உண்டியலை மர்ம நபர்கள் வீசிச்சென்றுள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில், ஏத்தாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: