சத்தியமங்கலம், டிச.5: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் அடர்ந்த வனப் பகுதியில் பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கர்நாடகா, கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து அம்மனை தரிசித்துச் செல்வது வழக்கம்.
இந்த நிலையில் நேற்று கார்த்திகை அமாவாசை என்பதால் காலை முதலே பக்தர்கள் கோயிலுக்கு வரத்தொடங்கினர். கொரோனா விதிகளின்படி பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசித்தனர். கோவிலின் முன்புள்ள குண்டத்தில் உப்பு, மிளகு தூவியும், வேல்கம்பில் எலுமிச்சை கனிகள் குத்தியும் நேர்த்திகடன் செலுத்தினர். பண்ணாரி அம்மன் கோவில் பகுதியில் பரவலாக மழை பெய்த நிலையில் பக்தர்கள் மழையை பொருட்படுத்தாமல் மழையில் நனைந்தபடியே சாமி தரிசனம் செய்தனர்.