திட்டக்குடி, டிச. 4: திட்டக்குடி மற்றும் வேப்பூர் பகுதியில் பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோளம், பருத்தி, நெல், வேர்க்கடலை, மரவள்ளிக் கிழங்கு, வரகு, உளுந்து உள்ளிட்ட மானாவாரி பயிர்கள் மழையால் பாதிக்கப்பட்டு சேதமடைந்துள்ளன. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க கோரி தமிழக விவசாயிகள் மக்கள் கட்சியின் தலைவர் தயா பேரின்பம் தலைமையில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் வதிஷ்டபுரம் பஸ் நிறுத்தத்தில் இருந்து பாதிக்கப்பட்ட பயிர்களுடன் ஊர்வலமாக வந்து, திட்டக்குடி தாசில்தார் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். முறையான கணக்கெடுப்பு செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.