திருப்பரங்குன்றம், டிச. 3: திருப்பரங்குன்றம் அருகே நிலையூர் பெரிய கண்மாய் மறுகால் பாய்வதால், நிலையூர் கால்வாய் வழியாக வரும் தண்ணீரை நிறுத்தக் கூடாது. பாசனக் கண்மாய்கள் நிரம்பும் வரை தண்ணீரை திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பரங்குன்றம் அருகே, கூத்தியார்குண்டுவில் 742 ஏக்கர் பரப்பளவில், நிலையூர் பெரிய கண்மாய் அமைந்துள்ளது. இந்த கண்மாயில் 23 அடி கொள்ளளவுக்கு தண்ணீர் தேக்கலாம். இதன் மூலம் சுமார் 3,500 ஏக்கர் விவசாய நிலஙகள் பாசன வசதி பெறுகின்றன. கண்மாயில் 3 மடைகள், 2 கழுங்குகள் உள்ளன. இந்த நிலையில் சோழவந்தான் அருகில் உள்ள முள்ளிப்பள்ளம் பகுதியில் இருந்து, வைகை உபரிநீர் நிலையூர் கால்வாய் மூலம் இந்த கண்மாய்க்கு வருகிறது. தற்போது வைகை அணை நிரம்பி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளதாலும், தொடர்மழையாலும் நிலையூர் கால்வாய் மூலம் கண்மாய்க்கு தண்ணீர் வருகிறது.