திருச்சி, டிச. 3: திருச்சி சோமரசம்பேட்டை அருகே மல்லியம்பத்து கிராமம் செங்கதிர் சோலையை சேர்ந்த சிவக்குமார். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். மல்லியம்பத்துவில் உள்ள மயான இடத்தில் இருந்த ஆக்கிரமிப்பை ஊராட்சி நிர்வாகம் மீட்டது. மயான நிலம் மீட்கப்பட்டதற்கு சிவக்குமார் ஊராட்சி நிர்வாகத்துக்கு உறுதுணையாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் நிலத்தை ஆக்கிரமித்திருந்த நபர்களுக்கும், சிவக்குமாருக்கும் இடையே விரோதம் ஏற்பட்டது. கடந்த 28ம் தேதி சிவக்குமாரை 2 பேர் கட்டையால் தாக்கினர். இதில் சிவக்குமார் பலியானார். சோமரசம்பேட்டை போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து சிவகுமாரின் மனைவி மைதிலி அளித்த புகாரின்பேரில் பிரபாகரன் (எ) மருதைராஜ், தீபக் மற்றும் அவர்களை தூண்டியதாக பிரபல வாசன் ரியல் எஸ்டேட் உரிமையாளரான ரவி முருகையா உட்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்தனர். மேலும் பிரபாகரன், தீபக்கை கைது செய்தனர்.