கோவை, டிச. 3: கோவை மக்களால் நடத்தப்படும் ‘’கோவை விழா’’ கடந்த 13 ஆண்டுகளாக நடந்து வருகிறது. இந்த ஆண்டுக்கான (14-வது வருடம்) கோவை விழா வரும் 2022 ஜனவரி 2-ம்தேதி முதல் 9-ம்தேதி வரை நடைபெற உள்ளது. கோவை மக்களின் கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் சமூக உணர்வின் அடையாளங்களை கொண்டாடும் வகையிலும், கலை, கல்வி, தொழில், விளையாட்டு, பொழுதுபோக்கு, வணிகம் மற்றும் விருந்தோம்பல் ஆகிய சிறப்பம்சங்களை உள்ளடக்கியும் இவ்விழா நடக்கிறது.
இதற்கான சின்னம் மற்றும் போஸ்டர் வௌியீட்டு விழா கோவை வாலாங்குளம் கரையில் நேற்று நடந்தது. கோவை மாவட்ட கலெக்டர் சமீரன், மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் சுன்கரா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு சின்னம் மற்றும் போஸ்டர்களை வெளியிட்டனர். நிகழ்ச்சியில், மாநகராட்சி துணை கமிஷனர் ஷர்மிளா, கொடிசியா தலைவர் ரமேஷ்பாபு, நந்தினி ரங்கசாமி, கோவை விழா தலைவர் அஷ்வின் மனோகர், இணை தலைவர் டாக்டர் செந்தில்குமார், சுமித் பிரசாத் உள்பட பலர் பங்கேற்றனர்.