ஓடும் பஸ்சில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி

குஜிலியம்பாறை, மார்ச் 24: குஜிலியம்பாறை அருகே லந்தக்கோட்டை நெசவாளர் காலனியை சேர்ந்தவர் ராஜலெட்சுமி(70). இவர் நெசவாளர் காலனியில் இருந்து கரூர் செல்வதற்காக அவ்வழியே வந்த தனியார் பஸ்சில் ஏறி சென்றார். பஸ்சில் முன்பக்க படியில் ஏறிய அவர், கம்பியை பிடித்தவாறு நின்றுள்ளார். கன்னிமார்பாளையம் முன்பாக உள்ள வளைவில் பஸ் திரும்பியுள்ளது. அப்போது கை தளர்ந்து நிலை தடுமாறிய ராஜலெட்சுமி ஓடும் பஸ்சில் முன்பக்க படிக்கட்டு வழியே சாலையில் விழுந்தார். பயணிகள் அலறல் சத்தம் கேட்டு டிரைவர் ராஜபூபதி பஸ்சை நிறுத்தினார். பின்னர் சாலையில் விழுந்து கிடந்த ராஜலெட்சுமியை தூக்கிய போது பின் பக்க தலையில் பலத்த காயமடைந்து இருந்தது. அவரை அதே பஸ்சில் ஏற்றி ஜெகதாபி வரை கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ராஜலெட்சுமி மகள் ஹேமலதா(30) அளித்த புகாரின்பேரில் குஜிலியம்பாறை போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

Related Stories: