சேலம், ஏப். 18:சேலம் அம்மாப்பேட்டையில் பாதாள சாக்கடைக்கு செல்லும் இணைப்புகளில் அடைப்பு ஏற்பட்டதால், கழிவுநீர் தேங்கி பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். சேலம் மாநகராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடை திட்ட பணிகள், கடந்த 10 ஆண்டுகளாக நடந்து வருகிறது. ஒருசில பகுதிகளில் முழுமையாக பணிகள் முடிக்கப்பட்டு, வீடுகளில் இருந்து இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இதனிடையே, சேலம் மாநகராட்சி 41வது டிவிசன் அம்மாப்பேட்டையை அடுத்த பாபு நகர் பகுதியில், பாதாள சாக்கடைக்கு செல்லும் இணைப்புகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அடைப்பு ஏற்பட்டது. இதனால், கழிவுநீர் வெளியேற முடியாமல் வீடுகளுக்குள் தேங்கி நின்றது. இந்நிலையில் நேற்று, அப்பகுதியைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் திரண்டு, தாமாக முன்வந்து கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.