பேராவூரணி அரசு கல்லூரியில் கொரோனா தடுப்பூசி முகாம்

சேதுபாவாசத்திரம், ஏப்.17: பேராவூரணி அரசு கல்லூரியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. இதில் 34 பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர். சேதுபாவாசத்திரம் அருகே பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கொரானா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் தனராஜன் தலைமையில் நடைபெற்ற இம்முகாமில், சேதுபாவாசத்திரம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராமலிங்கம் முன்னிலை வகித்தார்.

அழகியநாயகிபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் ரேவதி, சுகாதார ஆய்வாளர் முருகானந்தம் மற்றும் செவிலியர்கள் கொண்ட மருத்துவக்குழுவினர் தடுப்பூசி செலுத்தினர். கல்லூரி முதல்வர் தனராஜன் முதல் நபராக தடுப்பூசி போட்டுக் கொண்டார். அவரை தொடர்ந்து கல்லூரி பேராசிரியர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் என 34 பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி போடப்பட்டது. முன்னதாக டாக்டர் ரேவதி, ஆசிரியர்கள் மத்தியில் தடுப்பூசி போட்டுக்கொள்வதன் அவசியம், பின்பற்ற வேண்டிய வழி முறைகள் குறித்து விளக்கி பேசினார்.

Related Stories: