மண்ணச்சநல்லூர், ஏப்.15:மண்ணச்சநல்லூர் பகுதியில் அறிவிக்கப்படாத மின்வெட்டு அடிக்கடி ஏற்படுவதால் பொதுமக்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். தற்போது கோடைகாலத்தில் வெயில் 100 டிகிரிக்கு மேல் அடிப்பதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மண்ணச்சநல்லூர் பகுதியில் காலை மாலை இரவு என நேரம் காலம் இன்றி அடிக்கடி ஒரு மணி நேரம் முதல் 3 மணி நேரம் வரை அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்படுகிறது. இதனால் பகல் நேரத்தில் பொதுமக்கள் பெரும் அவதிப்படுகின்றனர்.
இரவு நேரத்தில் ஏற்படும் மின்வெட்டால் புழுக்கத்தில் குழந்தைகள் முதியவர்கள் பெண்கள் ,ஆண்கள் என அனைவரும் தூக்கத்தை தொலைத்து அவதியடைகின்றனர். மேலும் பகல் நேரத்தில் ஏற்படும் அறிவிக்கப்படாத மின்வெட்டால் கூல்டிரிங்ஸ் கடை, ஐஸ் கிரீம் கடை, பேக்கரி கடை, டெய்லர் என்று சிறு குறு வியாபாரிகளின் வியாபாரம் பாதிக்கப்பட்டு துன்பப்பட்டு வருகின்றனர். ஏற்கனவே கொரோனா அச்சுறுத்தலால் பாதியாக குறைந்துள்ள வியாபாரத்தால் துன்பப்படும் வியாபாரிகள் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டால் இருக்கும் கொஞ்சம் வியாபாரத்தையும் இழந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
அடிக்கடி ஏற்படும் அறிவிக்கப்படாத மின்வெட்டால் மண்ணச்சநல்லூர் பகுதியில் பொதுமக்கள் பாதிப்படைகின்றனர். இது குறித்து மின்வாரிய அதிகாரிகள் கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.