சேலம், ஏப். 15: சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நாக் கமிட்டி வருகைக்காக பல்வேறு வகையான விசாரணை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. சேலம் கருப்பூரில் பெரியார் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. பல்கலைக்கழகத்தில், உயர்கல்வி நிறுவனங்களுக்கான தேசிய தர மதிப்பீட்டுக் குழு (நாக் கமிட்டி) வழங்கிய, அந்தஸ்து சமீபத்தில் நிறைவடைந்தது. தற்போது மீண்டும், நாக் கமிட்டியினர் ஆய்வு நடத்தி அந்தஸ்து வழங்க, பல்கலைக்கழக தரப்பில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி ஓரிரு மாதங்களில் நாக் கமிட்டி, பெரியார் பல்கலைக்கழகத்திற்கு வந்து ஆய்வு நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, நாக் கமிட்டி வருகைக்காக பல்கலைக்கழகத்தில் பல்வேறு முன்னேற்பாட்டு நடவடிக்கைகள், இரவு, பகலாக நடந்து வருகிறது. அதன் ஒருபகுதியாக எஸ்சி., எஸ்டி பிரிவு, மிகவும் பிற்படுத்தப்டோருக்கான பிரிவு, சிறுபான்மையினர் பிரிவு, புகார் விசாரணை குழு என பல்வேறு கமிட்டிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதனிடையே இந்த கமிட்டிகள் பெயரளவிற்கு நியமிக்கப்பட்டுள்ளதாகவும், உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை எனவும் சர்ச்சை எழுந்துள்ளது.