பாலக்காடு,ஏப்:10: கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் த்ததமங்கமலம் கடைவீதியில் வேட்டைக்கருப்பசாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் திருவிழா இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். கடந்த ஆண்டு நடைபெற வேண்டிய திருவிழா கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக ரத்து செய்யப்பட்டது.
இந்த ஆண்டு திருவிழா கொரோனா பொதுமுடக்க தளர்வின்படி எளிய முறையில் நடக்க திட்டமிடப்பட்டது. இதன்படி கடந்த 3ம் தேதி கோயிலில் கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து 2 வாரங்கள் நடைபெறும் திருவிழாவில் நாள்தோறும் உற்சவருக்கு அபிசேகம்,ஆராதனைகள் நடந்து வருகிறது. இன்று குதிரைகள் ஓட்டப்பந்தயம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஒட்டப்பந்தயத்தில் பங்கேற்பதற்காக ஊட்டி, மைசூர், பெங்களூரூ, திண்டுக்கல், கோவை, பழநி, உடுமலை ஆகிய இடங்களிலிருந்து குதிரைகள் வந்துள்ளன.
கடந்த சில நாட்களாக ஊர்மக்கள் குதிரைகள் மீது சவாரி செய்து பயிற்சி பெற்றவாறு உள்ளனர். ஒவ்வொரு குடும்பத்தினரின் வழிபாடுகளாக இந்த ஓட்டப்பந்தயம் நிகழ்ச்சி நடக்கின்றது. திருவிழாவின் ஒரு பகுதியாக மலைவரவு என்ற நிகழ்ச்சியும் நடக்கிறது. நாளை முதல் 6 நாட்களுக்கு இரவு தோறும் ஊர்மக்களின் குழந்தைகள், சிறுவர், சிறுமியர் பல்வேறு கடவுள்களின் வேடங்கள் தரித்து அலங்கரித்த டிராக்டர்களில் ஊர்வலமாக வருவர்.
வண்டிவேஷங்களை காண சுற்றுவட்டாரங்களில் இருந்து நூற்றுக்கணக்கான மக்கள் வருவதுண்டு. வரும் 17ம் தேதி அலங்கரிக்கப்பட்ட யானை மீது உற்சவர் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். குதிரை ஓட்டபந்தயத்தை காண உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து பக்தர்கள் இன்று தத்தமங்கலம் வருகை தருவர். திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் திருவிழா கமிட்டியாரும், பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசாரும் செய்துள்ளனர்.