அயோத்தியாப்பட்டணம் அருகே மாணவி மர்மச்சாவு போலீசுக்கு தெரியாமல் உடல் எரிப்பு

அயோத்தியாபட்டணம், ஏப்.9: அயோத்தியாப்பட்டணம் அருகே 11ம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், போலீசுக்கு தெரியாமல் சடலத்தை எரித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அயோத்தியாபட்டணம் அருகே கூட்டாத்துப்பட்டி  பகுதியைச் சேர்ந்த முனியப்பன் என்பவரின் இளைய மகள் சரிதா(16). 11ம் வகுப்பு படித்து வந்த இவர், நேற்று காலை வீட்டில் சடலமாக தொங்கினார். ஆனால், முறையாக போலீசுக்கு தெரிவிக்காமல் சடலத்தை எரித்து விட்டனர். இதுகுறித்து காரிப்பட்டி காவல்நிலையத்திற்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். இதன்பேரில், போலீசார் விரைந்து சென்று விசாரித்தனர். இதில், காதல் விவகாரத்தில் மாணவியை அடித்து கொலை செய்து தூக்கில் தொங்க விட்டிருக்கலாம் என பொதுமக்கள் சந்தேகம் தெரிவித்தனர். இதையடுத்து, பெற்றோரின் மீது போலீசாரின் கவனம் திரும்பியது. மர்மமான முறையில் சிறுமி உயிரிழந்தது குறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்காமல் சடலத்தை எரித்தது ஏன் என விளக்கம் கேட்டனர். காதல் விவகாரத்தில் சிறுமி கொலை செய்யப்பட்டாரா என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: