துறையூர், ஏப்.8: துறையூர், முசிறி தொகுதியில் வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக அறையில் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது. தமிழகத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் துறையூர், முசிறி தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் நேற்றிரவு 7 மணிக்கு பின்னர் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் சீல் வைக்கப்பட்டு ஆயுதம் தாங்கிய போலீஸ் காவலுடன் வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டுள்ள துறையூர் அடுத்த கண்ணனூர் இமயம் இன்ஜினியரிங் கல்லூரி வளாகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இக்கல்லூரி வளாகத்தின் 2வது மாடியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு ஆயுதம் தாங்கிய போலீஸ் காவல் போடப்பட்டுள்ளது.அங்கு மிக பாதுகாப்பான முறையில் அறையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரி பார்க்கப்பட்டு பத்திரமாக வைக்கப்பட்டது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அப்பகுதிக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.