புதுச்சேரி, ஏப். 2: புதுச்சேரியில் சுயேட்சை வேட்பாளர் வீட்டை உடைத்து நகைகளை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுச்சேரி, தட்டாஞ்சாவடி விவிபி நகரில் வசிப்பவர் அம்பிகாபதி (63). இவர் ஊசுடு (தனி) தொகுதி முன்னாள் எம்எல்ஏவாக இருந்த நாகரத்தினத்தின் மகன் ஆவார். தற்போது அம்பிகாபதிக்கு காங்கிரசில் சீட் கிடைக்காத நிலையில் தனது தந்தை தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடுகிறார். இதற்காக அவர் கடந்த 10 நாட்களாக வில்லியனூர், பொறையூர்பேட் பகுதியில் உள்ள தனது சொந்த வீட்டில் அவ்வப்போது தங்கி ஊசுடு தனி தொகுதியிலேயே தேர்தல் களப்பணியில் ஈடுபட்டார். கடந்த 29ம்தேதி காலை தட்டாஞ்சாவடி விவிபி நகரில் உள்ள வீட்டை பூட்டிவிட்டு சென்ற அம்பிகாபதி பொறையூர்பேட்டில் தங்கியுள்ளார். மறுநாள் அதிகாலை அவரது செல்போனில் தொடர்பு கொண்ட, விவிபி நகர் ஏடிஎம் சென்டர் காவலாளி, உங்கள் வீட்டில் சந்தேகத்துக்கிடமான வகையில் லைட் எரிவதாக தெரிவித்துள்ளார்.