அரியலூரில் பரபரப்பு பிரபல நகைக்கடையில் வருமான வரி சோதனை

அரியலூர், ஏப்.1: அரியலூர் பெரிய கடை வீதியில் இயங்கி வருகிறது பிரபல நகை கடை. இக்கடையில் அன்மையில் வழக்கத்திற்கு மாறாக கூட்டமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து நேற்று முன்தினம் மாலை வருமான வரித்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். மேலும் 2வது நாளாக நேற்று காலையும் சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில் கணக்கில் வராத பல லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இப்பணம் நகைக்கடையில் வியாபாரத்திலிருந்து கணக்கில் காட்டப்படாமல் வைக்கப்பட்டிருந்ததா அல்லது அரசியல் கட்சிகளின் சார்பில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த பணமா என்பது குறித்து வருமான வரித்துறையினர் விசாரணையில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து வருமானவரி துறையினர் 3 பைகள் மற்றும் ஒரு இரும்பு சூட்கேசுகளை வாகனத்தில் எடுத்துச் சென்றனர். பறிமுதல் செய்யப்பட்ட பணத்திற்கு உரிய ஆவணங்கள் சமர்ப்பித்து பணத்தைப் பெற்றுக்கொள்ளும்படி வருமான வரித்துறையினர் கூறியதாக கூறப்படுகிறது.

Related Stories: