மாதவரம் தொகுதியில் வி.மூர்த்தி வாக்குேசகரிப்பு

திருவொற்றியூர், ஏப்.1: மாதவரம் தொகுதி அதிமுக வேட்பாளர் முன்னாள் அமைச்சர் மாதவரம் வி.மூர்த்தி நேற்று மாதவரம் பொன்னியம்மன் மேடு, தணிகாசலம் நகர் பகுதியில் உள்ள மசூதிக்கு சென்று இஸ்லாமியர்களிடையே வாக்கு சேகரித்தார். அப்போது மாதவரம் குடியிருப்போர் நல சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் நீலகண்ணன் மற்றும் ஜமாத் பிரதிநிதிகள், “இஸ்லாமியர்களுக்கு இடுகாடு அமைத்துக் கொடுக்க வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றி தரவேண்டும்,” என்றனர். அதற்கு பதிலளித்து பேசிய மாதவரம் மூர்த்தி, “கடந்த மாதம் என்னுடைய தலைமையில் ஜமாத் நிர்வாகிகள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தலைமை செயலகத்தில் நேரில் சந்தித்து இடுகாடு அமைத்து தரவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம்.

கண்டிப்பாக நிறைவேற்றுவதாக முதல்வர் உறுதி அளித்துள்ளார். மீண்டும் அதிமுக ஆட்சி அமைக்கப்பட்டு மூன்று மாதங்களில் இடுகாடு அமைத்து கொடுப்பேன். இஸ்லாமியர்களுக்காக பள்ளி மற்றும் சலுகைகளை கண்டிப்பாக பெற்றுத் தருவேன். எனவே இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து என்னை வெற்றி பெறச் செய்யுங்கள்,” இவ்வாறு பேசினார். இதில், முன்னாள் மண்டல குழு தலைவர் வேலாயுதம் மற்றும் ஏராளமான இஸ்லாமியர்கள் உடனிருந்தனர்.

Related Stories: