காரியாபட்டி, மார்ச் 31: திருச்சுழி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு எம்எல்ஏ தொகுதி முழுவதும் பொதுமக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இவர் நேற்று கரிசல்குளம், செவல்பட்டி, பெரியார்நகர், அச்சம்பட்டி, பாண்டியன்நகர், சின்ன காரியாபட்டி உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்து பேசியதாவது, ‘காரியாபட்டியில் தாலுகா, யூனியன் ஆபீஸ், அரசு ஆஸ்பத்திரி கூடுதல் கட்டிடம் உள்ளிட்டவை திமுக ஆட்சியில்தான் கொண்டு வரப்பட்டது. அதுபோல திமுக ஆட்சிக்கு வந்ததும் தீவிர சிகிச்சை பிரிவு அமைக்கபட்டு மருத்துவமனை நவீன மயமாக்கப்படும். செவல்பட்டி, காரியாபட்டி மயானங்கள் நவீன எரியூட்டும் மையம் அமைக்கப்படும்.
காரியாபட்டி பேரூராட்சியாக இருக்கும்போதே நகராட்சி அந்தஸ்துக்கு திமுக ஆட்சியில் உயர்த்தினோம். திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றவுடன் காரியாபட்டி பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார். பிரசாரத்தில் நகர செயலாளர் ஆர்.கே. செந்தில், ஒன்றிய செயலாளர் செல்லம், கண்ணன், மாவட்ட கவுன்சிலர் தங்கதமிழ்வாணன், வர்த்தகர் அணி போஸ், மாவட்ட பொருளாளர் வேலுச்சாமி, நகர அவை தலைவர் லியாக்கத்அலி, ஒன்றிய கவுன்சிலர் அரசகுளம் சேகர், மாவட்ட பிரதிநிதி சங்கரபாண்டியன், தங்கப்பாண்டியன், செல்வராஜ், கேசவன், ஆவியூர் சேது, மூர்த்தி, வக்கீல் திருநாவுக்கரசு, முத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.