சேலம், மார்ச் 31: சேலம் தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் ஏ.எஸ்.சரவணன் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இவர் நேற்று, 50வது வார்டுக்கு உட்பட்ட மணியனூர், காத்தாயம்மாள்நகர், எம்.ஜி.ஆர்.நகர், வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதி உள்ளிட்ட இடங்களில் வீடு வீடாகச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது வேட்பாளர் சரவணன் பேசியதாவது: இந்த பகுதியில் சாலை, சாக்கடை கால்வாய் வசதி சரிவர இல்லை. தொகுதி பக்கமே எட்டி பார்க்காத அதிமுக எம்எல்ஏ தான் இருந்துள்ளார். என்னை நீங்கள் வெற்றி பெறச் செய்யுங்கள், நான் அடிப்படை வசதிகளான சாலை, சாக்கடை வசதி, ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் தொட்டிகள் ஏற்படுத்தி தருவேன். பிரதான தொழிலான வெள்ளி தொழிலை காக்க நடவடிக்கை எடுப்பேன். வெள்ளி தொழிலாளர்களின் பாதுகாப்பிற்காக தனி நல வாரியம் அமைத்து, அவர்களின் வாழ்வு மேம்பட செய்யப்படும்.