திருத்தணி, மார்ச் 30: திருவள்ளூர் தொகுதி அதிமுக வேட்பாளர் பி.வி.ரமணா திருவாலங்காடு ஒன்றியத்திற்குட்பட்ட களாம்பாக்கம், சின்னமண்டலி, பாகசாலை, எல்.வி.புரம், ஒரத்தூர், பெரியகளக்காட்டூர், தொழுதாவூர், காபுல்கண்டிகை, குப்பங்கண்டிகை, மணவூர், ஜாகிர்மங்கலம், மருதவல்லிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீதி, வீதியாக சென்று இரட்டை இலைக்கு தீவிரமாக வாக்கு சேகரித்தார். அப்போது பொதுமக்கள் அவரை உற்சாகமாக வரவேற்று சால்வைகள், ஆளுயர ரோஜா மாலைகள் அணிவித்தும், மலர் கிரீடம் வைத்தும், பெண்கள் ஆரத்தி எடுத்தும் நெற்றி திலகம் இட்டும் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் அதிமுக வேட்பாளர் பி.வி.ரமணா பேசியதாவது, “திருவாலங்காட்டில் திறன் மேம்பாட்டு மையம் அமைத்து இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை அதிகரிக்க முயற்சி மேற்கொள்வேன். பஸ் வசதி இல்லாத கிராமங்களுக்கு அரசு பஸ் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுப்பேன். நெல் கொள்முதல் நிலையங்கள் மற்றும் நெல் சேமிப்பு கிடங்குகள் அமைக்கவும், கிராமத்தில் உள்ள நீர்நிலைகளை பாதுகாக்க ஏரி குளங்களை தூர்வாரி தண்ணீரை சேமித்து வைத்து விவசாயத்திற்கு பயன்படுத்தவும், ஏரி மதகுகளை சீரமைக்கவும், நிலத்தடி நீரை பாதுகாக்கும் வகையில் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டவும், கிராமப்புறங்களில் உள்ள நூலகங்களை நவீனப்படுத்தி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும், அனைத்து கிராமத்திற்கும் தார்சாலைகள் மற்றும் சிமெண்ட் சாலைகள் அமைக்கவும் ஒவ்வொரு கிராமத்திற்கும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கவும் உள்பட அனைத்து அடிப்படை வசதிகளை நிறைவேற்றித்தருவேன்.