வி.கே.புரம். மார்ச் 26: சிவந்திபுரம், அடையக்கருங்குளம் ஊராட்சி பகுதிகளில் அதிமுக வேட்பாளர் இசக்கிசுப்பையா வீதி வீதியாக சென்று தீவிர பிரசாரம் செய்து இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தார்.அம்பை சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் இசக்கி சுப்பையா தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகிறார். நேற்று சிவந்திபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட அகஸ்தியர்பட்டி, கஸ்பா, எம்ஜிஆர் தங்க நகர், புலவன்பட்டி, ஆறுமுகம்பட்டி மற்றும் அடையக்கருங்குளம், கல்சுண்டு காலனி, மன்னார்கோவில், வாகைகுளம், பிரம்மதேசம், கவுதமபுரி, அயன்திருவாலீஸ்புரம் உள்ளிட்ட பகுதிகளில் வீதிவீதியாக சென்று பிரசாரம் செய்த அவர், தொகுதி மக்களின் அடிப்படை தேவையான குடிநீர் தேவையை தொகுதி முழுக்க குறைவின்றி கொண்டு செல்வேன். ஜூன் 1ம்தேதி கார் சாகுபடிக்காக பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட ஏற்பாடு செய்யப்படும். மாஞ்சோலை உள்ளிட்ட எஸ்டேட் பகுதி மக்களின் அடிப்படை தேவைகளான பஸ் வசதி, மின்சாரம் உள்பட அனைத்து நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்வேன் என்றார்.