புதுக்கோட்டை, மார்ச் 25: விராலிமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அன்னவாசல் பகுதிகளிளான மேலப்பட்டி, சாலைப்பட்டி, மெய்யக்கவுண்டன்பட்டி, வலையப்பட்டி, சரளப்பட்டி, ஈச்சங்குடி, தெற்குப்பட்டி, மேலகோத்திரப்பட்டி, கோவிந்தநாயக்கபட்டி,மலைக்குடிப்பட்டி, கட்டக்குடி, ஆச்சநாயக்கபட்டி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிமுக வேட்பாளரான அமைச்சர் விஜயபாஸ்கர் தீவிர வாக்கு சேகரிப்பில் நேற்று ஈடுபட்டார். அவர் செல்லும் இடங்களில் பொதுமக்கள் மற்றும் பெண்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது பொதுமக்கள் மத்தியில் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியதாவது: கடந்த 10 ஆண்டுகளில் விராலிமலை தொகுதியை மாற்றி காட்டியுள்ளேன். நான் செல்லும் இடமெல்லாம் நீங்கள், எங்கள் வீட்டு பிள்ளை உங்களுக்கு தான் வாக்களிப்போம் என்று கூறுவதை கேட்கும்போது சந்தோஷமாகவும், மனநிறைவாகவும் உள்ளது. நான் என்றும் உங்களுக்காக உழைப்பேன். இன்பத்திலும், துன்பத்திலும் என்றும் உங்களோடு இருப்பேன் என்றார்.