தொண்டி, மார்ச் 24: ராமநாதபுரத்தில் நேற்று முன்தினம் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், திமுக ஆட்சிக்கு வந்தால், தொண்டியில் பஸ் டிப்போ அமைக்கப்படும் என்று உறுதி அளித்தார். இதனை இப்பகுதி மக்கள் வரவேற்றனர். தொண்டி பகுதி மக்கள் போக்குவரத்து பணிமனை அமைக்க வேண்டும் என்று நீண்டநாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். கடந்த காலங்களில் அதிமுக ஆட்சியில் இதற்கு நடவடிக்கை எடுக்க கோரி பல்வேறு இயக்கம் மற்றும் சமுதாயத்தின் சார்பில் பல முறை கோரிக்கை விடப்பட்டது. ஒவ்வொறு முறையும் ஏதாவது காரணம் கூறி இப்பகுதியில் பணிமனை அமைவதை தவிர்த்து வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் ராமநாதபுரத்தில் நடைபெற்ற வேட்பாளர் ஆதரவு கூட்டத்தில் தொண்டியில் பணிமனை அமைக்கப்படும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்தது இப்பகுதி மக்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.