ஆவடி, மார்ச் 23: ஆவடி தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் போட்டியிடும், திமுக வேட்பாளரும், திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளருமான ஆவடி சா.மு.நாசர், ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட 21, 22, 23, 34, 35 ஆகிய வார்டுகளில் திறந்த ஜீப்பில் வீதி, வீதியாக பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். அப்போது, அவருக்கு பொதுமக்கள் மாலை, சால்வைகள் அணிவித்து வரவேற்பு அளித்தனர். மேலும், அவருக்கு ஆவடி வடக்கு நகர செயலாளர் ஜி.நாராயணபிரசாத் தலைமையில் தொண்டர்கள் தாரை, தப்பட்டை முழங்க பட்டாசு வெடித்து ஆரவாரம் செய்தனர். அப்போது, வேட்பாளர் ஆவடி நாசர் பேசியதாவது, “ஆவடி தொகுதியில் கலை மற்றும் அறிவியல், பொறியியல் பட்டதாரிகள் டிப்ளமோ படித்து ஏராளமான இளைஞர்கள் வேலையின்றி தவித்து வருவது எனது கவனத்திற்கு வந்தது. எனது அறக்கட்டளை மூலமாக, அவர்களுக்காக நடத்திய வேலைவாய்ப்பு முகாமில், 100க்கும் மேற்பட்ட பிரபல கம்பெனிகள் கலந்துகொண்டன. அதில், பங்கேற்ற 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வேலையின்றி தவித்த இளைஞர்களுக்கு வேலைக்கான நியமன ஆணை வழங்கினோம். எப்போதும் மூடி கிடக்கும் ஆவடி ரயில்வே கேட்டில் சுரங்கப்பாதை அமைக்க நடவடிக்கை மேற்கொள்வேன். ஆவடி ரயில் நிலையத்தில் அனைத்து எக்ஸ்பிரஸ் ரயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுப்பேன். அங்கு பயணிகளுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுப்பேன். மாதந்தோறும் பொதுமக்கள், பொதுநல சங்கங்களை சந்தித்து குறைகளை கேட்டு அறிந்து நிவர்த்தி செய்வேன். ஏழை மாணவர்களுக்கு கல்வி கற்க தேவையான உதவிகளை செய்வேன்.