திருப்பரங்குன்றம், மார்ச் 19: மதுரை திருப்பரங்குன்றம் தொகுதி திமுக மற்றும் மதச்சார்பற்ற கூட்டணியைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பொன்னுத்தாய் வேட்புமனு தாக்கல் செய்தார். மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தொகுதி சட்டமன்ற தேர்தலில் வேட்புமனு தாக்கல் கடந்த 12ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அதிமுக, அமமுக வேட்பாளர்கள் ஏற்கனவே வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். நேற்று காலை திமுக கூட்டணியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரான எஸ்.கே.பொன்னுத்தாய் தாலுகா அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் முருகேஸ்வரியிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். மதுரை எம்பி சு.வெங்கடேசன், திமுக தெற்கு மாவட்ட துணைச்செயலாளர் பாலாஜி ஆகியோர் உடனிருந்தனர். முன்னதாக திருநகர் இரண்டாவது பஸ்நிறுத்தத்திலிருந்து கே.பி. ஜானகியம்மாள் படத்திற்கு மலர் அஞ்சலி செய்து ஊர்வலமாக புறப்பட்டு திருப்பங்குன்றம் தாலுகா அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தனர். மார்க்சிஸ்ட் கட்சி வேட்புமனு தாக்கல் செய்ய வந்த போது மக்கள் நீதி மய்ய வேட்பாளர் பரணிராஜனும் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்திருந்தார். அப்போது இரண்டு வேட்பாளர்களும் ஒருவொருக்கொருவர் வாழ்த்து கூறி கொண்டனர்.