ஊத்துக்கோட்டை, மார்ச் 19:பெரியபாளையம் அருகே ஆரணியில் உள்ள கால்நடை மருத்துவமனை குடிமகன்களின் இலவச பாராக மாறிவருகிறது. இங்கு, இரவு நேரத்தில் குடிக்கும் மதுபிரியர்கள் குடித்துவிட்டு பாட்டீல்களையும், மருத்துவமனையின் ஜன்னல் கண்ணாடிகளையும் உடைத்து அட்டகாசத்தில் ஈடுபடுகின்றனர். பெரியபாளையம் அருகே ஆரணி பேரூராட்சியில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இப்பகுதியில், விவசாயிகள் அதிகம் உள்ளனர். மேலும், இங்குள்ள ஆரணி பேரூராட்சி அலுவலகம் அருகில் 50 வருடத்திற்கு முன்பு கால்நடை மருத்துவமனை கட்டப்பட்டது. இந்த கால்நடை மருத்துவமனைக்கு ஆரணி, மங்களம், மல்லியங்குப்பம், புதுப்பாளையம், குமரபேட்டை, திருநிலை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து ஆடு, மாடு, கோழி, பூனை, நாய் உள்ளிட்ட விலங்குகள் உடல்நிலை பாதிக்கப்பட்டால் சிகிச்சைக்காக அதை வளர்ப்பவர்கள் கொண்டு வருவார்கள். இந்நிலையில், இந்த கால்நடை மருத்துவமனை மிகவும் பழுதடைந்து விரிசல் ஏற்பட்டு, இதன் மேற்கூரை தளத்தின் சிமெண்டு சிலாப்புகள் உடைந்து சிதிலமடைந்து காணப்பட்டது.