சாயல்குடி, ஆக.4: சாயல்குடி மாதவன்நகரில் விற்பனை செய்யும் நோக்கில் ஒரு வீட்டில் குட்கா புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து அப்பகுதியில் உள்ள வடிவேல் முருகன் என்பவரது வீட்டினை சோதனை செய்தபோது, சாக்கு மூட்டைகளில் குட்கா இருப்பது கண்டறியப்பட்டது. அவர் கொடுத்த தகவலின் பேரில், அருகே உள்ள பூப்பாண்டியபுரம் கோட்டைச்சாமி என்பவருக்கு சொந்தமான பழைய இரும்பு குடோனில் சோதனை செய்தனர். அங்கும் சாக்கு மூட்டைகளில் குட்கா இருப்பது தெரியவந்தது. சுமார் 386 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதனையடுத்து, வடிவேல்முருகன்(48), கோட்டைச்சாமி(32) மற்றும் கூட்டாளிகள் சாயல்குடி முனீஸ்வரன்(31),நரிப்பையூர் கோபால்(51) ஆகிய 4 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து ரூ.1.49 ரொக்கப்பணம், கடத்தலுக்கு பயன்படுத்திய மினி லாரி, 2 கார்கள், ஒரு ஆட்டோ ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட குட்காவின் மதிப்பு ரூ.50 லட்சம் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.
