விழுப்புரம், ஆக. 1: விழுப்புரம் மாவட்டத்தில் கஞ்சா விற்ற வாலிபருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை, ரூ.1 லட்சம் அபராதம் விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்து உத்தரவிட்டது. விழுப்புரம் மாவட்டம் கிளியனூர் காவல் நிலைய போலீசார் கடந்த 2023 அக்டோபர் 19ம் தேதி அப்பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வாகனத்தில் அதிவேகமாக வந்த நபரை பிடித்து சோதனையிட்டபோது அவரிடம் ஒரு கிலோ 250 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
தொடர்ந்து விசாரணையில் அவர் கிளியனூர் பகுதியைச் சேர்ந்த ஐயப்பன்(27) என்பது தெரிய வந்தது. தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் கஞ்சா மற்றும் பிளாஸ்டிக் கவர்கள், டிஜிட்டல் எடை இயந்திரம், ரூ.32,000 ரொக்க பணம், செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் போதை பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
சாட்சிகள் விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதி எழிலரசி நேற்று தீர்ப்பு கூறினார். அதில் குற்றம் சாட்டப்பட்ட ஐயப்பனுக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதம் விதித்தார். அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் 6 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்து உத்தரவிட்டார். சிறை தண்டனை விதிக்கப்பட்ட ஐயப்பன் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிறையில் அடைக்கப்பட்டார்.
