கூடங்குளம், ஆக.1: ராதாபுரம் தாலுகா சட்டப்பணி குழுவின் சார்பில் கூடங்குளம் அருகேயுள்ள இடிந்தகரை பிஷப் ரோச் மேல்நிலைப் பள்ளியில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ராதாபுரம் நீதிமன்ற நீதிபதியும், தாலுகா சட்டப்பணிகள் குழுவின் தலைவருமான குபேரசுந்தர் தலைமை வகித்து பள்ளி வளாகத்தில் மரக்கன்று நடினார்.
பின்னர் மாணவ, மாணவிகள் போதை பொருள் குறித்த விழிப்புணர்வை வழக்கறிஞர்கள் எடுத்து கூறினர். போதையினால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படுகிறது, அதை சட்டத்தின் மூலம் எப்படி நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பதை பற்றியும் போதை தடுப்பு மற்றும் கட்டுபாடு குறித்தும் நீதிபதி குபேரசுந்தர் விளக்கினார். இதைதொடர்ந்து மாணவர்கள் போதை விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் ரஞ்சனி ஜோசப், வழக்கறிஞர்கள் சங்கச் செயலாளர் ராஜேஷ் குமார், செயற்குழு உறுப்பினர் அனிஷா, நூலக பொறுப்பாளர் சங்கரி, வழக்கறிஞர்கள் நல்லகண்ணு, செல்லத்துரை, காமராஜ், நீதிமன்ற ஊழியர் காளிமுத்து, தாலுகா சட்டப்பணி குழு ஒருங்கிணைப்பாளர் லட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
