சிமெண்ட் ஆலைக்கு எரிபொருளாக அனுப்பப்படும் பழநி நகர் பிளாஸ்டிக் கழிவுகள்

 

பழநி, ஜூலை 29: பழநி நகரில் சேகரிக்கப்படும் மறுசுழற்சி செய்ய இயலாத பிளாஸ்டிக் கழிவுகள் சிமெண்ட் ஆலைக்கு எரிபொருளாக அனுப்பி வைக்கப்படுகிறது. பழநி சிறப்புநிலை நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. சுமார் 1 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு நாளொன்றிற்கு சுமார் 42 மெட்ரிக் டன் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. இதில் சுமார் 20 டன் மக்கும் குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு, நகராட்சி குப்பை கிடங்கிலேயே இயற்கை நுண்ணுரம் தயாரிக்கப்படுகிறது. சுமார் 4 டன் அளவுள்ள மறுசுழற்சி செய்யக்கூடிய பிளாஸ்டிக் கழிவுகள் தூய்மை பணியாளர்களிடமே விற்பனை செய்திட ஒப்படைக்கப்பட்டு விடுகிறது.

மறுசுழற்சி செய்ய இயலாத, விற்பனைக்கு உகந்ததல்லாத சுமார் 5 டன் அளவுள்ள பிளாஸ்டிக் கழிவுகள் இயந்திரங்கள் மூலம் நசுக்கப்பட்டு பண்டல் செய்யப்படுகிறது. இவற்றை அப்புறப்படுத்தும் வகையில் நகராட்சி நிர்வாக இயக்குநர் உத்தரவின் பேரில், பழநி நகராட்சி ஆணையர் ராஜலட்சுமி அறிவுறுத்தலின்படி சிமெண்ட் ஆலைக்கு மாற்று எரிபொருளாக அனுப்பி வைக்கப்படுகிறது. நேற்று முதற்கட்டமாக சுமார் 12.50 டன் மறுசுழற்சி செய்ய இயலாத பிளாஸ்டிக் கழிவுகள் மாற்று எரிபொருளாக சிமெண்ட் ஆலைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளர் முருகையா மற்றும் சுரேஷ்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் செய்திருந்தனர்.

Related Stories: