நாகப்பட்டினம், ஜூலை 28: நுகர்பொருள் வாணிப கழகங்களில் பருவகால எழுத்தர் பணியிடங்களை தவெக தலைவர் மற்றும் தமிழக முதல்வர் தேர்தல் அறிக்கை வாக்குறுதியின்படி நிறைவேற்றகோரி நாகையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பருவகால எழுத்தர் பணியிடங்களை தேர்தல் கால வாக்குறுதியின் படி தமிழக அரசு நிறைவேற்ற கோரி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக அனைத்து தொழிற்சங்கம் சார்பில் நாகப்பட்டினம் முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. தொமுச மண்டல செயலாளர் தம்பிதுரை தலைமை வகித்தார். மண்டல தலைவர் சுப்புரெத்தினம் முன்னிலை வகித்தார். தேர்தல் கால வாக்குறுதியின் படி பருவகால எழுத்தர் பணியிடங்களை தமிழக அரசு நிரப்ப வேண்டும்.
பருவ கால எழுத்தர் பணியிடங்களை நிரந்தரம் செய்ய வேண்டும். கொள்முதல் பணியாளர்களுக்கு நடைமுறை செலவினங்கள் அனைத்தையும் நிர்வாகம் ஏற்று கொள்ள வேண்டும். அப்பாவி தொழிலாளர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கையை கைவிட வேண்டும். நீதிமன்ற வழக்குகளை காரணம் காட்டி மீண்டும் பணி வழங்க மறுப்பதை தமிழக அரசு கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. அண்ணா தொழிற்சங்க மண்டல தலைவர் சிவக்குமார் நன்றி கூறினார்.
