கறம்பக்குடி, ஜூலை 27: கறம்பக்குடி அருகே பந்தவகோட்டை கிராமத்திற்கு செல்லும் பழுதடைந்த சாலை சீரமைக்கப்படுமா? என வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் 39 ஊராட்சிகள் அமைந்துள்ளது. இதில் பந்தவகோட்டை ஊராட்சியும் அமைந்துள்ளது. இந்த ஊராட்சியில் பல்வேறு கிராமங்கள் காணப்படுகின்றன. குறிப்பாக விளக்கு சாலையில் இருந்து உள் பகுதியில் பந்துவகோட்டை கிராமத்திற்கும் செல்லும் சாலை பழுதடைந்து காணப்படுகிறது. குறிப்பாக அரசு உயர்நிலைப்பள்ளி அருகே அந்த கிராமத்திற்கு செல்லும் கே.கே பட்டி கிராமத்திற்கு செல்லும் சாலை தார்சாலை பழுதடைந்து ஜல்லிகற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாகவும் மழை பெய்தால் மழைநீர் தேங்கியும் காணப்படுவதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது.
இதன் காரணமாக பள்ளி மாணவ, மாணவிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதன்படி ஊராட்சிக்கு உட்பட்ட பந்துவகோட்டை கே.கே பட்டி கிராமத்திற்கும் மேலும் அதே ஊராட்சியில் காணப்படுகின்ற மருதன் கோன் விடுதி ஊராட்சி பந்துவகோட்டை கிராமத்திற்கும் செல்லும் சாலை பழுதடைந்து ஜல்லிகற்கள் பெயர்ந்து காணப்படுகின்றன. எனவே பந்துவக்கோட்டை ஊராட்சி மற்றும் மருதன் கோன் விடுதி ஊராட்சி மக்களின் அனைத்து தரப்பின நலன் கருதி பழுதடைந்து காணப்படும் சாலை சீரமைத்து புதிய தார்சாலை அமைத்து தர வேண்டும் அப்பகுதி மக்கள் பள்ளி மாணவ, மாணவி உள்ளிட்ட ஏராளமானோர் தமிழக அரசுக்கும் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திற்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
