காரியாபட்டி, ஜூலை 27: காரியாபட்டி யூனியன் அலுவலகம் செல்லும் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளால் நெருக்கடி ஏற்படுகிறது. காரியாபட்டி யூனியன் அலுவலகம் செல்லும் சாலையில் வேளாண்மை அலுவலகம், உழவர்சந்தை, அரசு பயணியர் விடுதி, வேளாண்மை துறை அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. இங்குள்ள அரசு அலுவலகங்களுக்கு தினமும் மக்கள் வந்து செல்கின்றனர். இந்த சாலையில் நடைபாதை வியாபாரிகள், தள்ளுவண்டி வியாபாரிகள் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். அதோடு தினமும் 100க்கும் மேற்பட்ட டூவீலர்களை இஷ்டப்படி நிறுத்தி சென்று விடுகின்றனர். இதுபோன்ற ஆக்கிரமிப்பு பிரச்சனைகளால் மக்கள் தினமும் அவதிப்படுகின்றனர்.
அரசு அலுவலக ஆய்வுக்கு வந்த மாவட்ட கலெக்டர் சுகபுத்ரா சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து பேரூராட்சி வணிக வளாக வியாபாரிகள் ஆக்கிரமிப்புக்களை அகற்றக்கோரி காரியாபட்டி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். அதிகாரிகள் முறையான நடவடிக்கை எடுத்தாததால் தொடர்ந்து யூனியன் அலுவலக சாலை ஆக்கிரமிப்பால் சிக்கி தவிக்கிறது. காரியாபட்டியில் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் ஆக்கிரமிப்புக்களை நிரந்தரமாக அகற்ற வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள், பொதுநல அமைப்புகள் பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
ஆக்கிரமிப்புகளை யார் முன்னின்று அகற்றுவது என்ற பிரச்சனை பேரூராட்சி நிர்வாகம் மற்றும் வருவாய் துறையினரிடையே இருந்து வருகிறது. விருதுநகர் மாவட்ட கலெக்டர் காரியாபட்டி பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை உரிய முறையில் அகற்ற வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார். ஆனால் அதிகாரிகளின் மெத்தனத்தால் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெறாமல் உள்ளது என்று மக்கள் புகார் தெரிவித்தனர்.
