கடலூர் மாவட்டத்தில் வாகன சோதனையில் இதுவரை ₹1.45 கோடி பறிமுதல்
கடலூர், மார்ச் 16: கடலூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு மாவட்டத்தில் 27 பறக்கும் படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். 27 நிலையான கண்காணிப்பு குழுவினர், 9 வீடியோ கண்காணிப்பு குழுக்கள், 9 செலவின கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு தொடர்ந்து 24 மணி நேர தேர்தல் கண்காணிப்பில் ஈடுபட உத்தரவிடப்பட்டுள்ளது. மாவட்டத்திலுள்ள 9 சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சோதனையின்போது முறையான ஆவணங்கள் ஏதும் இன்றி இதுவரையில் ரொக்கமாக ஒரு கோடியே 12 லட்சத்து 9 ஆயிரத்து 360 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுபோன்று பரிசுப் பொருட்கள் 5 லட்சத்து 17ஆயிரத்து 144 மதிப்பிலும், தங்கம், வெள்ளி உள்ளிட்ட பொருட்கள் 28 லட்சம் மதிப்பிலும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக இதுவரையில் நான்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் 11 ஆயிரத்து 310 ரூபாய் மதிப்பிலான மதுபானங்கள் உரிய ஆவணம் மற்றும் உரிமம் இன்றி விற்பனை செய்யப்பட்ட நிலையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி இதுவரை ஒரு கோடியே 45 லட்சத்து 37 ஆயிரத்து 814 மதிப்பிலான பணம், பொருட்கள், மதுபானம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மரக்காணம் அருகே ஆமை குஞ்சுகளை வனத்துறையினர் கடலில் விட்டனர். மரக்காணம், மார்ச் 16: விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் அழகன்குப்பம் முதல் அனிச்சங்குப்பம் வரையில் சுமார் 40 கிலோ மீட்டர் தூரத்திற்கு இயற்கையாக அமைந்த கடற்கரை பகுதி உள்ளது. இப்பகுதிக்கு ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் முதல், ஏப்ரல் மாதம் வரையில் கடல் ஆமைகளின் இனப்பெருக்க காலம் ஆகும். இந்த மாதங்களில் ஆழ்கடல் பகுதியில் இருக்கும் ஆமைகள் இனப்பெருக்கத்திற்காக தரைப்பகுதிக்கு வருகிறது. இது போல் வரும் ஆமைகள் கடற்கரை பகுதியில் இருக்கும் மணல் மேட்டில் பள்ளம் தோண்டி அதில் முட்டைகள் இட்டு விட்டு மீண்டும் கடலுக்கு சென்று விடுகிறது. இந்த முட்டைகள் சில வாரங்களில் சிறிய குஞ்சுகளாக வெளியில் வரும். இதுபோல் இனப்பெருக்கத்திற்காக கடற்கரை பகுதிக்கு வரும் கடல் ஆமைகள், மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் பைபர் படகுகளில் அடிபட்டு ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான ஆமைகள் இறந்து விடுகிறது. மேலும் கடற்கரை பகுதியில் ஆமைகள் இடும் முட்டைகளை நரி, நாய் போன்ற விலங்கினங்களும் அழித்து விடுகிறது. இதனால் கடல் ஆமைகளின் இனம் அழிந்து வரும் நிலையில் உள்ளதாக கடல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். கடல் ஆமைகள் பலவழிகளில் அழிந்து வருவதால் கடலின் தட்பவெப்ப நிலையும் மாறும் என்றும் கூறுகின்றனர். இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே வசவன்குப்பம் பகுதியில் வனத்துறை சார்பில் ஆமை பாதுகாப்பு குடில் அமைத்து இப்பகுதியில் ஆமைகள் இடப்படும் பல ஆயிரம் முட்டைகள் எடுத்து இந்த ஆமைகள் பாதுகாப்பு குடிலில் வைத்து அந்த முட்டைகள் குஞ்சுகளாக பொறிக்கப்பட்ட உடன் பத்திரமான கடலில் விட்டு விடுவார்கள். இந்த ஆண்டு இதுவரையில் 26 ஆமை குஞ்சுகள் கடற்கரை பகுதிக்கு வந்து 3368 முட்டைகளை இட்டுள்ளது. இந்த முட்டைகளை வனத்துறையினர் எடுத்து ஆமைகள் பாதுகாப்புகுடிலில் கடந்த 40 நாட்களுக்கும் மேலாக பாதுகாத்து வந்தனர். இதில் நேற்று 224 முட்டைகளில் இருந்து ஆமை குஞ்சுகள் பொறிக்கப்பட்டது. இந்த ஆமை குஞ்சுகளை விழுப்புரம் மாவட்ட வனத்துறை அலுவலர் அபிஷேக்தோமர் உத்தரவின் பேரில் திண்டிவனம் வனச்சரகர் பெருமாள், வனவர் பாலசுந்தரம் மற்றும் வனத்துறையினர் பத்திரமாக வசவன்குப்பம் கடற்கரையில் விட்டனர்.