தஞ்சாவூர், ஜூலை 21: 13 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தஞ்சையில் தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தினர் பேரணியாக சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர்கள் சங்கம் சார்பில் 13 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நேற்று தஞ்சை திலகர் திடலில் இருந்து பனகல் கட்டிடம் வரை பேரணி நடத்தினர். இதற்கு முன்னாள் மாநிலத் தலைவர் மணிவண்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கலியமூர்த்தி முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் ஜெய்சங்கர், மாவட்ட பொருளாளர் செல்வம், துணைத் தலைவர்கள் ஜேம்ஸ் வாட், அண்ணாதுரை, இணை செயலாளர்கள் ரவி, வேலாயுதம், ஓய்வு பெற்ற பணியாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் செல்வம், மாவட்டத் தலைவர் வீரகுமார், பொருளாளர் ஜெயபாலன், சட்ட ஆலோசகர் ராமச்சந்திரன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.
இந்த பேரணியில் ஏராளமானோர் கலந்து கொண்டு கோரிக்கை அட்டைகளை ஏந்தியபடி சென்றனர். பின்னர் பனகல் கட்டிடம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, தொடக்க கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு பதிவாளரால் கடந்த 1-4-23 அன்று புதிய ஊதியம் அனுமதிக்கப்பட்டது. இதில் விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளால் சுமார் 40 சதவீதம் சங்கங்களில் புதிய ஊதியம் அனுமதிக்க இயலாத நிலை உள்ளதை கருத்தில் கொண்டு நிபந்தனைகள் அனைத்தையும் தளர்த்தி அனைத்து சங்கங்களுக்கும் புதிய ஊதிய உயர்வு முழுமையாக அனுமதிக்கப்பட வேண்டும்.1-4-23க்கு பின்னர் ஓய்வு பெற்றவர்களுக்கும், புதிய ஊதியம் நிலுவை தொகையுடன் அனுமதிக்கப்பட வேண்டும். தாயுமானவர் திட்டத்தில் விற்பனையாளர்கள் சந்திக்கும் பல்வேறு நடைமுறை சிரமங்களை களைந்து மன நிறைவோடு பணிபுரியும் வகையில் ஆரோக்கியமான சூழ்நிலையை உருவாக்கி கொடுக்க வேண்டும். பணிக்கொடை ரூ.25 லட்சமாக உயர்த்தி அனுமதிக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
