புதுக்கோட்டை, ஜூலை 21: புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி வட்டம், மணமேல்குடி கிராமத்தை சேர்ந்த 9 குடும்பங்களுக்கு 2010ம் ஆண்டு நீதிமன்றம் சாதகமாக தீர்ப்பு வழங்கி உள்ளது. இருப்பினும், நீதிமன்றத் தீர்ப்பை புறக்கணித்து, போலி கிரைய ஆவணங்கள் மூலம் முறைகேடாகப் பட்டாவை சில தனிநபர்கள் முறைகேடாக மாற்றி உள்ளதாகவும், தாசில்தார் அலுவலகத்தில் லஞ்சம் பெற்றுக்கொண்டு போலி பட்டா மாற்றப்பட்டுள்ளதாகவும் கடந்த 16 ஆண்டுகளாக இதுகுறித்து வருவாய்த் துறையினரிடம் 1444 முறை மனு அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
அதனால் வரும் ஜூலை 27ம்தேதி புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் போராட்டம் நடத்தப் போவதாகவும், அதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால், சுதந்திர தினத்தன்று சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி முன் 9 குடும்பங்களைச் சேர்ந்த உறுப்பினர்களும் உயிரைத் துறக்கப் போவதாக மணமேல்குடி பகுதியைச் சேர்ந்த கேசவன் என்ற முதியவர் எச்சரிக்கை விடுத்து கழுத்தில் கோரிக்கை மற்றும் எச்சரிக்கை சுவரொட்டியை அணிந்து கொண்டு புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அருணாவை சந்தித்து மனு அளிக்க வந்தார். பின்னர் அந்த முதியவரிடம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர்.
