பாம்பாற்றின் கரையோரம் தடுப்புச்சுவர் அமைக்க கோரிக்கை

தேனி, ஜூலை 21: பெரியகுளம் அருகே காந்தி நகரில் உள்ள பாம்பாற்றின் கரையோரம் தடுப்புச் சுவர் அமைக்க கோரி பகுஜன் சமாஜ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பொருளாளர் பாண்டியன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தின் போது பெரியகுளம் அருகே தாமரைக் குளம் பேரூராட்சிக்கு உட்பட்ட காந்திநகர் பகுதியில் பாம்பாற்று கரையோரம் சுமார் 500க்கும் மேற்பட்ட மக்கள் குடியிருந்து வருகின்றனர். மழைக்காலங்களில் ஆற்றில் வரும் வெள்ள நீரால் குடியிருப்பு பகுதி மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இப்பகுதியில், புதர்மண்டி கிடப்பதால் விஷப் பூச்சிகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து விடுகின்றன. எனவே குடியிருப்பினை ஒட்டியுள்ள பாம்பாற்றின் கரையோரம் தடுப்புச் சுவர் எழுப்ப வேண்டும் என வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories: