திருப்பூர், ஜூலை 21: திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 45வது வார்டு பகுதியில் முறையான குடிநீர் வழங்க கோரியும் சாக்கடை, சாலைகளை சரி செய்து தரக்கோரியும் பொதுமக்கள் காலி குடங்களுடன் நேற்று போராட்டம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 45வது வார்டு பகுதி பெரிய கடை வீதி, மிஷின் வீதி மற்றும் புரோக்கர் வீதி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இப்பகுதியில் முறையான குடிநீர் வழங்கப்படுவதில்லை என்றும், தோண்டப்பட்ட சாக்கடைகளையும் சாலைகளையும் மாநகராட்சி நிர்வாகம் கடந்த நான்கு மாதங்களாக சரி செய்து தரவில்லை எனக்கோரி அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் காலி குடங்களுடன் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கக்கூடிய சுத்திகரிப்பு நிலையமும் முறையாக இயங்குவதில்லை எனவும், மாமன்ற உறுப்பினரிடமும் மாநகராட்சி அதிகாரிகளிடமும் பலமுறை கோரிக்கை வைத்தும் மாநகராட்சி அதிகாரிகள் மெத்தனமாக செயல்படுவதாகவும், விரைந்து குடிநீர் மற்றும் சாக்கடை தார் சாலைகளை சரி செய்து தர வேண்டும் எனவும் அப்படி செய்து தரவில்லை என்றால் மக்களை ஒன்று திரட்டி மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் தெரிவித்தனர்.
