பழநி, ஜூலை 20: குறைந்தபட்ச பென்சனான ரூ.6 ஆயிரத்து 750 வழங்க வேண்டுமென சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஒய்வூதியர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். பழநியில் தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தின் தொப்பம்பட்டி வட்டார மாநாடு நடந்தது. வட்டாரத் தலைவர் தமிழ்ச்செல்வி தலைமை வகித்தார். வட்டார துணைத் தலைவர் சுப்பிரமணியன் வரவேற்றுப் பேசினார். மாவட்டத் தலைவர் வேலுச்சாமி சிறப்புரையாற்றினார். வட்டார செயலாளர் சீதாலட்சுமி அறிக்கை வாசித்தார். மாவட்ட துணைத்தலைவர் பாலகிருஷ்ணன், இணைச் செயலாளர்கள் பெரியசாமி, கலாவதி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
இந்த மாநாட்டில் புதிய வட்டார நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாநாட்டில் ஓய்வூதியர்களுக்கு குறைந்தபட்ச பென்சன் தொகையாக ரூ.6 ஆயிரத்து 750 வழங்க வேண்டும். ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி வழங்க வேண்டும். ஸ்டார் ஹெல்த் காப்பீடு திட்டத்தில் சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்களை இணைத்திட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
