சென்னை: போலந்து நாட்டைச் சேர்ந்தவருக்கு சிக்கலான இதயக்கீழறை மிகைத்துடிப்பு பாதிப்புக்கான சிகிச்சையை காவேரி மருத்துவமனை வெற்றிகரமாக செய்துள்ளது. போலந்து நாட்டைச் சேர்ந்தவருக்கு சீரற்ற இதயத்துடிப்பு பிரச்னை இருந்துள்ளது. சிகிச்சைக்காக காவேரி மருத்துவமனை மின் உடலியங்கியல் துறையில் மூத்த மருத்துவ நிபுணருடன் காணொளி மூலம் ஆலோசனை பெற்ற பிறகு, சிகிச்சைக்காகச் சென்னை வர முடிவெடுத்தார்.
போலந்து நாட்டிலிருந்து அவரது பயணம் தொடங்கியது முதல், அவருக்குத் தேவையான விசா உதவி, பயண ஏற்பாடுகள், தங்குமிட வழிகாட்டுதல் மற்றும் தனிப்பட்ட கவனிப்பு என முழுமையான ஆதரவை காவேரி மருத்துவமனையின் பன்னாட்டு நோயாளிகள் சேவைப் பிரிவு வழங்கியது.
அவரை பரிசோதனை செய்ததில் இதயத்தின் கீழறைகளில் ஏற்படும் சீரற்ற துடிப்புப் பிரச்னைகளால் ‘ப்ரீமெச்சூர் வென்ட்ரிகுலர் காம்ப்ளக்ஸ்’ (PVCs) எனப்படும் தேவையற்ற கூடுதல் துடிப்புகளும், ‘இதயக்கீழறை மிகைத்துடிப்பு’ போன்ற ஆபத்தான நிலைகளும் ஏற்பட்டு இருப்பது தெரியவந்தது.
அதிநவீன 3டி மேப்பிங் தொழில்நுட்பம் மற்றும் இன்ட்ரா-கார்டியாக் எக்கோ இமேஜிங் மூலம், இதயத் துடிப்பைச் சீர்குலைக்கும் அசாதாரண மின் சுற்றுகளைத் துல்லியமாகக் கண்டறிந்து, ஆரோக்கியமான இதயத் திசுக்களுக்கு எவ்வித பாதிப்பும் இன்றி ‘கதீட்டர் அப்லேஷன்’ சிகிச்சையை மருத்துவர் தீப் சந்த் ராஜா தலைமையிலான குழு மேற்கொண்டது. இந்த சிகிச்சை வெற்றி விகிதத்தை அதிகரிப்பதோடு, இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப உதவியது. சிகிச்சை வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில், நோயாளி தற்போது வேகமாக குணமடைந்து வருகிறார்.
