கோபால்பட்டி, ஜூலை 17: சாணார்பட்டி அருகே அரிவாளை கையில் வைத்துக் கொண்டு ஆடிய இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது.சாணார்பட்டி அருகே கோபால்பட்டியில், திண்டுக்கல்-நத்தம் நெடுஞ்சாலையில் நேற்று காலை, இளைஞர் ஒருவர் கையில் பெரிய அரிவாளுடன் நடுரோட்டில் நடனம் ஆடியுள்ளார். அந்த வழியாக சென்றவர்கள், இளைஞரின் செயலைக் கண்டு அச்சமடைந்து ஆங்காங்கே ஒதுங்கி நின்றனர்.
இது குறித்து தகவலறிந்த சாணார்பட்டி காவல்துறையினர், அந்த இளைஞரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில், வேம்பார்பட்டியைச் சேர்ந்த நோயல்ஜான்(30) என்பதும், கார்மெக்கானிக் என்பதும் தெரிய வந்தது. அந்த நபரிடமிருந்து அரிவாளை பறிமுதல் செய்த போலீசார், தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். காலை நேரத்தில் மிகவும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் திண்டுக்கல்-நத்தம் சாலையில் நடுரோட்டில் இளைஞர் அரிவாளுடன் ஆடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
