ராணிப்பேட்டை, ஜூலை 13: ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா வட்டாரத்தில், நடப்பு 2026-27ம் ஆண்டு சொர்ணவாரி பருவத்தில் பயிர் காப்பீடு திட்டதில், வருவாய் கிராம அளவில் சொர்னவாரி நெல் பயிர்களுக்கு விவசாயிகள் பயிர் காப்பீடு செய்யலாம் என வாலாஜா வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் திலகவதி தெரிவித்துள்ளார். எதிர்பாராத இயற்கை இடர்பாடுகள் மூலம் ஏற்படும் பயிர் சேதங்களின் இழப்பிலிருந்து பாதுகாத்துக்கொள்ள சொர்ணவாரி பருவ பயிர் காப்பீடு திட்டத்தில் பதிவு செய்ய விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. சொர்ணவாரி நெற்பயிர்களை காப்பீடு செய்ய வரும் ஜூலை 15ம் தேதி(நாளை மறுதினம்) கடைசி நாளாகும். இத்திட்டத்தில் பயிர் கடன் பெறும் மற்றும் கடன் பெறாத அனைத்து விவசாயிகளும் விருப்பத்தின் பேரில் பயிர் காப்பீடு செய்யலாம். இத்திட்டத்தில், நெல்-I (சொர்ணவாரி பருவம்) பயிருக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.703 பிரீமியம் செலுத்தி பயிர் காப்பீடு செய்யலாம்.
இத்திட்டத்தில் பயிர் காப்பீடு செய்ய, சிட்டா, நடப்பு ஆண்டு பயிர் சாகுபடி அடங்கல், ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம், ஆகிய ஆவணங்களுடன், அனைத்து தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கிளைகள், கிராமிய வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் பொது சேவை மையங்களை அணுகலாம். 2026ம் ஆண்டில் ‘சூப்பர் எல் நினோ’ நிகழ்வு காரணமாக, செப்டம்பர் வரையிலான மாதங்களில் வெப்பநிலை வழக்கத்தை விட அதிகமாகவும் பருவமழையின் அளவு குறையவும் வாய்ப்புள்ளது. எனவே நெற்பயிரை சேதங்களின் இழப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ளவும், விவசாயிகள் இறுதி நேர நெரிசலை தவிர்க்கவும், விவசாயிகளின் விண்ணப்பங்கள் விடுபடாமல் இருக்கவும் பயிர் காப்பீடுத்திட்டத்தில் இணைந்து தங்களது நெற்பயிரை முன்கூட்டியே பதிவு செய்ய வேண்டும் என வாலாஜா வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் தெரிவித்துள்ளார்.
