போக்குவரத்து விதிமீறல் அதிகரிப்பு வேடிக்கை பார்க்கும் காவல்துறை பொதுமக்கள் குற்றச்சாட்டு திருப்பத்தூர் மாவட்டத்தில் நாளுக்குநாள்

திருப்பத்தூர், ஜூலை 13: திருப்பத்தூர் மாவட்டத்தில் நாளுக்குநாள் போக்குவரத்து விதிமீறல்கள் அதிகரித்து வருகிறது. இதனை காவல்துறையினர் கண்டுகொள்ளாமல் வேடிக்கை பார்ப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் சமீப காலமாக சாலை விபத்துகள் அதிகம் ஏற்பட்டு வருகிறது. தேசிய நெடுஞ்சாலைகளில் சுமார் 50க்கும் மேற்பட்ட (பிளாக் ஸ்பாட்டுகள்) விபத்து நடைபெறும் இடங்கள் கண்டறியப்பட்டுள்ளது. சாலை விபத்துகளை தடுக்க கலெக்டர் ரவிக்குமார், எஸ்பி அக்க்ஷய் அனில் வாகரே ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, போக்குவரத்து நெரிசல் மற்றும் சாலை விபத்துக்களை தடுக்க திருப்பத்தூர் போக்குவரத்து காவல் நிலையம் அமைக்கப்பட்டது. மேலும், ஆங்காங்கே சிக்னல்கள் அமைக்கப்பட்டு போக்குவரத்து சீரமைக்கும் பணி நடந்து வந்தது.

இருப்பினும் வாகனஓட்டிகள் ஆடு, மாடுகளை அளவுக்கு அதிகமாக கனரக வாகனங்களில் ஏற்றிச்செல்கின்றனர். அதே வாகனத்தில் அலட்சியமான முறையில் சுமார் 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள் படுத்துக்கொண்டு செல்கின்றனர். இருசக்கர வாகனத்தில் செல்லும் இளைஞர்கள் சாகசம் செய்வது போல் நின்றுக்கொண்டு செல்வது உள்ளிட்ட செயல்கள் நாள்தோறும் அரங்கேறி வருகிறது. இதனால் அதிகம் விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புக்களும் நடக்கிறது.

ஆனால் சாலைவிதிகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுப்பதில்லை. வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே சாலைகளில் விபத்து ஏற்படுத்தும் வகையில் ஆபத்தான பயணத்தை மேற்கொள்ளும் வாகனஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும். போக்குவரத்து போலீசார் தொடர்ந்து வாகன சோதனையில் மேற்கொண்டு சாலை விதிகளை பின்பற்றாத நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: