நல்லம்பள்ளி,ஜூலை 13: தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம் டொக்குபோதனஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்டது கெட்டுப்பட்டி கிராமம். இந்த கிராமத்தில் சுமார் 300க்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் மாரியம்மன் கோயில் அருகில் உள்ள நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான சாலையில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. இந்த பள்ளத்தால் தொம்பரகாம்பட்டி தேசிய நெடுஞ்சாலை வழியாக, சாமிசெட்டிப்பட்டி செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். அவ்வப்போது விபத்துக்களில் சிக்குகின்றனர். சிறிய காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி வருகின்றனர். சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சீர்செய்ய வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பல முறை கோரிக்கை விடுத்தும், அவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர்.
இந்த சாலையில் ஏற்பட்ட பள்ளத்தில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக புதியதாக இந்த சாலையில் வரும் வாகன ஓட்டிகள் பள்ளத்தின் ஆழம் தெரியாமல் வாகனத்தை விடும்போது விபத்தில் சிக்குகின்றனர். வாரக்கணக்கில் பள்ளத்தில் தண்ணீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. எனவே, வாகன ஓட்டிகளில் நலனை கருத்தில் கொண்டு, உயிரிழப்பு ஏற்படுவதற்கு முன்னதாக சாலையில் ஏற்பட்ட பள்ளத்தை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
