பூந்தமல்லி: வளசரவாக்கத்தில் 8ம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பள்ளி ஆசிரியரிடம் மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை வளசரவாக்கம் ஆழ்வார் திருநகர் பகுதியில் அரசு உதவிபெறும் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் நேற்று, 8ம் வகுப்பு படித்து வரும் சிறுமியின் பின்புறம், வகுப்பு ஆசிரியர் கையால் அடித்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். அப்போது, ‘எதற்காக அடித்தீர்கள்’ என மாணவி கேட்டபோது, ‘எப்படி இருக்கிறது என தெரிந்து கொள்வதற்காக அடித்தேன்’ என ஆசிரியர் கூறியுள்ளார்.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மாணவி, ஆசிரியர் நடந்துகொண்ட செயல் குறித்து தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதையடுத்து சிறுமியின் பெற்றோர், பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் சம்பந்தப்பட்ட ஆசிரியரை செல்போனில் தொடர்பு கொண்டு கேட்டபோது, முறையான பதில் கூறவில்லையாம். இதனால் சிறுமியின் பெற்றோர், வளசரவாக்கம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
