சிவகங்கை, மார்ச் 11: சிவகங்கை நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டத்தில் வீட்டு இணைப்பு கொடுப்பதற்கு வீட்டு உரிமையாளர்களிடம் பல ஆயிரம் வசூல் நடப்பதாக கலெக்டரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன. சுமார் 40ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு ரூ.23.5 கோடியில் பாதாள சாக்கடை திட்டத்திற்கான பணிகள் தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சி திட்டத்தின் கீழ் கடந்த 2007 மார்ச்சில் தொடங்கப்பட்டன. ரூ.23.5 கோடியில் இதற்கான பணிகள் குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் செய்யப்பட்டது. கழிவுநீர் வெளியேற்றும் கட்டமைப்பு பணிகள், ஆள் நுழைவு தொட்டிகள், கழிவுநீர் போக்கு குழாய்கள், வீட்டு இணைப்புக்கான குழாய் அமைக்கும் பணிகள், கழிவு நீரேற்று நிலையம் உள்ளிட்டவைகள் அமைக்கப்பட்டன. ஒப்பந்தப்படி 2009ல் பணி முடிந்திருக்க வேண்டும். ஆனால் மூன்றாம் கட்ட பணியான கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பது, சுத்திகரிப்பு செய்யப்பட்ட நீரை பயன்படுத்துவது உள்ளிட்டவைகளுக்கான பணி முடிவடைவதில் தொய்வு ஏற்பட்டதால் பணிகள் முடிவடையாமல் இழுபறி நீடித்தது. சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான இடம் தொடர்பான பிரச்சினை கடந்த 2015ம் ஆண்டு முடிவுக்கு வந்தது. ஆனால் தற்போது வரை திட்டப்பணிகள் முழுமையடைந்து செயல்பாட்டிற்கு வரவில்லை.