கும்பகோணம், மார்ச் 10: விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் தலித் இளைஞர்கள் மீது பொய் வழக்குப் போடும் காவல்துறையை கண்டித்து கும்பகோணத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.கும்பகோணம் பகுதியில் மணல் கடத்தல் கஞ்சா விற்பனை திருட்டுத்தனமாக மது விற்பனை செய்யும் குற்றவாளிகளை காவல்துறைக்கு தெரிந்தும் அந்த குற்றவாளிகளை விட்டு விட்டு அப்பாவி படித்த தலித் இளைஞர்கள் மீது காவல்துறையினர் போட்டுள்ள குற்றப்பதிவு பட்டியலை நீக்கும்படி விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கும்பகோணம் காந்தி பூங்கா அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் மண்டல செயலாளர் விவேகானந்தன் தலைமை வகித்தார். இதில் மாவட்ட செயலாளர் அறிவழகன் தொகுதி செயலாளர் முல்லைவளவன், ஒன்றியச் செயலாளர்கள் சசிகுமார் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.