வருசநாடு, ஜூன் 26: கடமலைக்குண்டு, வருசநாடு பகுதிகளில் கூடுதல் தடுப்பணைகல் கட்டப்படுமா என விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர். கடமலைக்குண்டு மயிலாடும்பாறை ஒன்றியத்தில் மூல வைகை உற்பத்தியாகும் பகுதியாக வெள்ளிமலை அரசரடி மலைப்பகுதி திகழ்கிறது. மேலும் மேகமலை வனப்பகுதிகளில் சிறு ஆறு சிறு ஊற்றுக்களாக ஒன்று கூடி மயிலாடும்பாறை கிராமத்தை வந்தடைகிறது.
இந்நிலையில் பல ஆண்டுகளாக இப்பகுதி விவசாயிகள் வைகை ஆற்றின் குறுக்கே கூடுதல் தடுப்பணைகள் கட்ட வேண்டி விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்பு பொதுப்பணித்துறை சார்பில் அதிகாரிகள் தடுப்பணைகள் அமைப்பது குறித்து ஆய்வுகள் மேற்கொண்டனர்.
ஆனால், இதுவரையும் எந்தவித நடவடிக்கையும் இல்லாமல் இத்திட்டத்தை கிடப்பில் போடப்பட்டுள்ளதால் இப்பகுதிகளில் விவசாய நிலங்களுக்கு தேவையான நிலத்தடி நீர் மட்டங்கள் குறைந்து வருவதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். மேலும் இந்த பகுதிகளில் வைகை ஆறு மக்களின் வாழ்வாதார ஜீவ நதியாக விளங்கி வருகிறது. எனவே கூடுதல் நீர்த்தேக்க தடுப்பணை கட்டினால் ஆண்டிபட்டி தொகுதி முழுவதும் குடிநீர் பஞ்சம் நீங்கும் இடமாகவும் விவசாய உற்பத்தி அதிகரிக்கும் எனவும் விவசாயிகள் தொடர்ந்து நீண்ட காலமாக கோரிக்கையை முன் வைத்து வருகின்றனர். எனவே இந்த பகுதிகளில் கூடுதல் நீர் தேக்க தடுப்பு அணைகள் கட்டி குடிநீர் பஞ்சத்தை போக்குவதற்கு விவசாயத்தை பாதுகாப்பதற்கும் தேனி மாவட்ட ஆட்சியரும் தமிழக முதலமைச்சரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடமலைக்குண்டு வருசநாடு பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து மூங்கிலாறு, வருசநாடு, மயிலாடும்பாறை, கடமலைக்குண்டு, அய்யனார்கோவில், டாணா தோட்டம், கண்டமனூர், வருசநாடு, தும்மக்குண்டு, மேல்வாலிப்பாறை, சீலமுத்தையாபுரம் உள்ளிட்ட ஓடைப்பகுதிகளில் மற்றும் மூல வைகை ஆற்றின் இரு புறங்களிலும் தடுப்பணைகள் கட்டப்பட்டு பாதுகாப்பு பணியும் செய்து வரவேண்டும் அவ்வாறு செய்தால் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதற்கும் கூடுதல் தண்ணீரை தேக்கி தடுப்பணை அமைக்க வேண்டும் என விவசாயிகள் தெரிவித்தனர்.
