ஜல்லிக்கற்கள் பெயர்ந்து கரடுமுரடான சாலை

 

ராயக்கோட்டை, ஜூன் 23: ராயக்கோட்டை அருகே ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக மாறிய தார்சாலையை புதுப்பித்து தர வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டையில் இருந்து பழையூர் கிராமம் வழியாக கினியன்பள்ளம் தாண்டி தர்மபுரி மாவட்டம் காடு சின்ன கவுண்டன அள்ளி, கிட்டம்பட்டி, நம்மாண்டஅள்ளியை கடந்து பஞ்சப்பள்ளி மற்றும் அருகில் உள்ள கிராமங்களுக்கு சாலை செல்கிறது. அந்த சாலையில் பள்ளி மாணவர்களின் வசதிக்காக டவுன் பஸ் மற்றும் மினி பஸ் இயக்கப்பட்டு வருகிறது. அதோடு விவசாயிகள் சாகுபடி செய்யும் விளை பொருட்களை விற்பனை செய்ய ராயக்கோட்டை மண்டிகளுக்கு டெம்போ போன்ற மினி வாகனங்களிலும், டிராக்டர் மற்றும் டூவீலர்களிலும் எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், சாலையில் ஜல்லிக்கற்கள் முற்றிலுமாக பெயர்ந்து கரடு முரடாக மாறியுள்ளது. சாலையை புதுப்பிக்க கோரிக்கை விடுத்த நிலையில் ஆங்காங்கே பிட்டு, பிட்டாக பேட்ஜ் ஒர்க் போட்டுள்ளனர். பல இடங்களில் புதுப்பிக்காமல் ஜல்லி ரோடாக காட்சியளிக்கிறது. அதிலும் கினியன்பள்ளம் என்னும் இடத்தில் தார்சாலை முற்றிலுமாக அழிந்து ஜல்லி கற்களாக உள்ளது. அதில் டூவீலர்கள் செல்லும்போது சறுக்கி விழுந்து காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பழுதடைந்த தார்சாலையை புதுப்பிக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைக்கின்றனர்.

 

Related Stories: