நெல்லை: நெல்லை மாவட்டம் களக்காடு பேரூராட்சி தலைவராக கடந்த 2011-16ல் பி.சி.ராஜன் இருந்தார். அவரும் அப்போது செயல் அலுவலராக இருந்த முத்துக்குமார் என்பவரும் சேர்ந்து தனியாருக்கு 74 ஏக்கரில் பிளாட் அப்ரூவல் செய்ததில் ரூ. 1 கோடியே 20 லட்சம் அரசுக்கு இழப்பீடு ஏற்படுத்தியது கண்டறியப்பட்டது. இதுகுறித்து நெல்லை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். நெல்லை ஊழல் தடுப்பு நீதிமன்ற நீதிபதி சுப்பையா வழக்கை விசாரித்து, பிளாட் அப்ரூவல் கொடுத்த அப்போதைய பேரூராட்சி தலைவர் பி.சி.ராஜன் மற்றும் முத்துக்குமார் ஆகியோருக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் தலா ரூ.31 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.
நெல்லை மாவட்டத்தில் தற்போது முதன்முறையாக பிளாட் அப்ரூவல் முறையில் அரசுக்கு நிதி இழப்பீடு செய்ததற்காக 2 பேருக்கு தண்டணை வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. நிதி இழப்பீட்டு தொகை ரூ.1 கோடியே 20 லட்சத்தை தண்டனை பெற்றவர்கள் திரும்ப செலுத்தியதும் குறிப்பிடத்தக்கது.
